வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு கோவை கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்புகள் தீவிரம்..!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இன்று துவங்கும் வேட்பு மனு தாக்கல் 27 ம் வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 28 ம் தேதி வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு 30 ம் தேதி வேட்பு மனு திரும்பப் பெறும் தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் அலுவலகங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதால் நேற்று வேட்பாளர்களுக்கான எல்லை கோடுகள் 100 மீட்டர் 200 மீட்டர்களில் போடப்பட்டன. மேலும் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் 360 டிகிரி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலும், அலுவலகத்திற்கு உள்ளும், எல்லை கோடுகள் போடப்பட்டு உள்ள பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.