ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு – வியாபாரி கைது..!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம், லட்சுமி நகர், 3 -வது வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 51) ஆடு மேய்க்கும் தொழிலாளி .இவர் அந்த பகுதியில் உள்ள காடுகளில் ஆடுகளை மேய்த்து வருகிறார் .இதற்காக அங்குள்ள லட்சுமி நகர் வழியாக ஆடுகளை ஓட்டி செல்வார். அப்போது அந்த ஆடுகள் நல்லாம்பாளையம் லட்சுமி நகர் 3-வது வீதியில்மளிகை கடை நடத்தி வரும் அருள் பிரின்ஸ் ( வயது 30) என்பவரது கடைக்கு முன் வைத்திருந்த காய்கறிகளையும் இலைகளையும் தின்றது. இதை அருள் பிரின்ஸ் கண்டித்தார்.இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தேவராஜ் ஒட்டிச் சென்ற ஆடுகள் மீண்டும் அருள் பிரின்ஸ் கடைக்கு முன்வைத்திருந்த காய்கறிகளை தின்றது .இதைப் பார்த்த அருள் பிரின்ஸ் கல்லால் எரிந்து அந்த ஆடுகளை துரத்தினார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள் பிரின்ஸ் அரிவாளால் தேவராஜை வெட்டினார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து வியாபாரி அருள் பிரின்சை கைது செய்தார் . இவர் மீது கொலை முயற்சி, உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..