பயங்கரவாதிகளை ஜி போட்டு அழைக்கும் சமாஜ்வாடி, காங்கிரஸ்- பிரதமர் மோடி சாடல்.!

பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டால், பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டால் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கண்ணீர் சிந்துவதாக, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.

இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோயில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,

“56 பேர் பலி, 200 பேர் காயம் அடைய காரணமான அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது. ஆனால், இதுபோன்ற பயங்கரவாதிகளை சில கட்சிகள் ஆதரித்து, அனுதாபம் காட்டுகின்றது

சமாஜ்வாடி, காங்கிரஸ் தலைவர்கள், ஒசாமா போன்ற பயங்கரவாதியை ‘ஜி’ என்று மரியாதையுடன் அழைக்கின்றனர். பாட்லா ஹவுஸ் என்கவுன்டரில் பயங்கரவாதிகளை ஒழித்ததற்காக கண்ணீர் விட்டனர்.

உத்தர பிரதேசத்தில் நடந்த 14 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்குகளில், பல பயங்கரவாதிகளின் மீதான வழக்குகளை திரும்ப பெற்று, முந்தைய சமாஜ்வாதி அரசு உத்தரவு பிறப்பித்து இருந்ததும் உங்களுக்கு தெரியும்.

தொடர்ந்து குண்டுவெடிப்புகளை பயங்கரவாதிகள் நிகழ்த்தினார்கள். அப்போதைய சமாஜ்வாடி அரசாங்கம் இது தொடர்பான பயங்கரவாதிகள் மீது வழக்கு போடுவதற்கு கூட அனுமதிக்கவில்லை” என்று பிரதமர் மோடி தனது பிரச்சத்தில் பேசினார்.