அனைத்து பள்ளிகளிலும் ஓட்ட போட்டிகள் நடத்த வேண்டும்- கோவையில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்.!!

கோவை மணியக்காரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தியும் நேற்று மினி மராத்தான் ஓட்ட போட்டி நடந்தது. மராத்தான் போட்டியை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி .ஜி . பி . சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மராத்தான் போட்டியில் சைலேந்திரபாபுவும் பங்கேற்று ஓடினார் .2 கிலோ மீட்டர் 5 கிலோமீட்டர் 10 கிலோமீட்டர் என 3 பிரிவுகளாக நடந்த ஓட்டப்பந்தயத்தில் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக சைலேந்திரபாபு பேசியதாவது:- தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை தொடங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தோம். இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனால் பள்ளி – கல்லூரி மற்றும் கிராமங்களில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. இதேபோன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது .இப்போது உள்ள குழந்தைகள் ஓடுவதற்கு தயாராக இல்லை .இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள் குறைந்தது 5 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும் .எனவே ஓட்ட போட்டிகளை நடத்த அனைத்து பள்ளிகளும் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்..