சின்னத் தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறு வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது..!

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் சின்னத் தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019- அன்று நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும். அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திரவடிவு உள்பட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2.1.2020- அன்று எண்ணப்பட்டது. அன்று இரவு 10 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. முதலில் தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சுதா 2,553 வாக்குகளும், அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்திரவடிவு 2,549 வாக்குகளும் பெற்றதாகவும், தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அறி விக்கப்பட்டது. ஆனால் வாக்குகள் மறுபடியும் எண்ணப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் சவுந்திர வடிவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா, தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை மனு அளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதா சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர்தேர்தலில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிடக்கோரி கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று குருடம்பாளையம் அருகே அருணா நகர் சமுதாய நலக்கூடத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இரந்தது.அத்துடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய 12 பெட்டிகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மறுவாக்கு எண்ணிக்கை 12 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மறு வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அவை கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது