அசாமில் கோயிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு – நடந்தது என்ன..?

ந்திய நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று அசாமில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு போராட்டம் நடைபெற்றது.

இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் நடைபெற உள்ளது.

இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. நேற்று முன்தினம் (ஜன. 20) ராகுல் காந்தியின் ‘இந்திய நீதிப் பயணம்’ அருணாச்சல பிரதேசம் சென்றடைந்தது. தொடர்ந்து நேற்று அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் வந்த பஸ்சை சுற்றி வளைத்த பாஜ தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என கோஷமிட்டனர். கைகளில் கம்புகளை வைத்திருந்த தொண்டர்கள் ஒற்றுமை யாத்திரைக்கு எதிராகவும் கூச்சலிட்டனர்.

அவர்களை தடுக்க முயன்ற அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் போராவை பாஜவினர் தாக்கினர். இதில், அவரது மூக்கு, வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த ராகுல் காந்தி உடனே பஸ்சில் இருந்து வெளியே இறங்கி அவர்களுடன் பேச வந்தார். பின்னர் பஸ்சில் ஏறிய அவர் அங்கு நின்ற பாஜவினரை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார். இதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் இன்று, அசாம் மாநிலத்தில் உள்ள படாதிரவாதன் கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை கோயிலுக்குள் அனுமதிக்காததால் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது ஏன் என காவல்துறையினரிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு போலீசார், பிற்பகல் 3 மணிக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் எனவும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு முடிந்த பின்னர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து ராகுல் காந்தி பேசுகையில், ‘நாங்கள் கோயிக்குப் போக முயற்சி செய்கிறோம். அவர்கள் அழைத்தார்கள், இப்போது பார்க்க முடியாது என்று சொல்கிறார்கள். நாங்கள் எதையும் வலுக்கட்டாயமாகச் செய்யப் போவதில்லை,.நாங்கள் எங்கள் யாத்திரையைச் செய்ய வேண்டும். அனுமதிக்காததற்கான காரணம் என்ன என்று கேட்கிறோம். நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யப் போவதில்லை’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.