சொத்து வரி உயர்வு… மக்களால் இதையெல்லாம் சமாளிக்க முடியாது… அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்.!!

தமிழகத்தில் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வானது உடனடியாக அமலுக்கு வருகிறது.

அதாவது, தமிழகத்தில்‌ உள்ள நகராட்சிகள்‌, பேரூராட்சிகளில்‌ 600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும்‌, 601 முதல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 5௦ சதவீதமும்‌, 1201 முதல்‌ 1800 சதுர அடி வரை பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும்‌, 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 100 சதவீதமும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

வணிகப்‌ பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும்‌ வரி உயர்த்தப்படுகிறது. சொத்துவரியை பலமடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சொத்துவரி உயர்வுக்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்துவரி 150% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்தகூடாது!

சொத்துவரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்; பொருளாதார சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.