அரசு உபரி நிலம், கட்டிடங்களை பணமாக்க புதிய திட்டம்: மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்..!

இந்தியாவில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டி வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள், நிலம், கட்டிடங்கள் ஆகியவற்றைப் பணமாக்கும் திட்டத்தைச் சில மாதங்களுக்கு முன் தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டத்தை உருவாக்கியது.

இந்நிலையில் இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், அரசுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்களைத் திறம்பட நிர்வாகம் செய்து பணமாக்க புதிய நிறுவனத்தை மத்திய அரசு துவங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தேசிய நிலப் பணமாக்கக் கழகம் (என்எல்எம்சி) என்னும் புதிய நிறுவனத்தை அரசுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்களைப் பணமாக்கும் புதிய நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

தேசிய நிலப் பணமாக்கக் கழகம் (என்எல்எம்சி) என்பது மத்திய அரசின் சொந்தமான நிறுவனமாக விளங்கும். இந்நிறுவனத்தைத் துவங்க ஆரம்ப அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனமாக 5000 கோடி ரூபாயும் மற்றும் 150 கோடி ரூபாய் paid-Up பங்கு மூலதனத்துடன் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய நிலப் பணமாக்கக் கழகம் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உபரி நிலம் மற்றும் கட்டிட சொத்துக்களைக் கைப்பற்றிப் பணமாக்கும் பணிகளை மேற்கொள்ளும். இந்தத் திட்டம் குறித்து 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய நிலப் பணமாக்கக் கழகம் மூலம் மத்திய அரசிடம் பயன்படுத்தாத மற்றும் அதிகளவில் பயன்படுத்த முடியாமல் வைத்திருக்கும் சொத்துக்களைத் தனியாருக்குக் கொடுத்தும் பணமாக்க உள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) கீழ் சுமார் 3400 ஏக்கர் நிலம் உள்ளது.

இதன் மூலம் தனியார் துறை முதலீடுகள் அதிகரிக்கும், புதிய பொருளாதார நடவடிக்கைகள் உருவாகும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படும் மற்றும் பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பிற்கான நிதி ஆதாரங்களை உருவாக்கும் போன்ற தூண்டுவதற்கு, பயன்படுத்தப்படாத இந்தச் சொத்துக்கள் மூலம் உருவாக்க முடியும்.