பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி..

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று என்பது இரண்டு அலைகளாக மக்களை பெரிதும் வாட்டி வதைத்த நிலையில் மூன்றாம் அலை பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்களும் , அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஜூன் இரண்டாம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்பும் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைக்கு படுத்திக் கொண்டதுடன், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி, போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.