சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி மரணம்

கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் ( வயது 43)இவர் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையானவர்.இதை யடுத்து மதுரையில் 1997-ம் ஆண்டு நடந்த சிறை அதிகாரி கொலை வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் கடந்த 14 ஆண்டுகளாக முடக்குவாதம் மற்றும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு சிறைத் துறை சார்பில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் அபுதாகிர் உடல்நிலையை கருதி ஐகோர்ட் உத்தரவின் பேரில் அவருக்கு நிரந்தர பரோல் வழங்கப்பட்டது ..இதனால் அவர் வீட்டில் தங்கி இருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.ஆனாலும் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. எனவே கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அபுதாகிர் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை அவர் இறந்தார்.இவரது மறைவையொட்டி கோவையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.திருப்பூரில் இருந்து 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்புக்கு வந்துள்ளனர்.இதே போல தேனி, திருச்சி, மதுரை, ஆகிய வெளிமாவட்டங்களில் இருந்தும்,தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.