பிரதமர் மோடி கோவையில் இன்று ரோடு ஷோ… பாதுகாப்பு வளையத்துக்குள் கோவை – மத்திய, மாநில போலீசார் குவிப்பு.!!

கோவை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை 5:30 மணிக்கு தனி விமான மூலம் கர்நாடகாவில் இருந்து கோவை வருகிறார். பாஜக கூட்டணியை ஆதரித்து மாலை 5 – 45 மணி முதல் 6-45 மணி வரை ” ரோடு ஷோ “தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் இருந்து ஆர் .எஸ் .புரம், டி.பி. ரோடு வரை இந்த ‘ரோடு ஷோ “தேர்தல் “பிரச்சாரம் நடைபெறுகிறது.இரவில் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார், நாளை (செவ்வாய் ) காலையில் 9 – 45 ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார். அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு 11-40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சேலம் செல்கிறார். மதியம் 1 மணிக்கு சேலம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.பிறகு 1-50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சேலம் விமானம்நிலையம் செல்கிறார். 2 – 20 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தமிழ்நாடுகாவல்துறை சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் கோவையில் முகாமிட்டுள்ளார். இதற்கிடையே பிரதமரின் தனி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் கோவையில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் . நேற்று அந்த பிரிவை சேர்ந்த ஐ.ஜி. லவ் குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆர் எஸ். புரத்தில் வாகன அணி வகுப்பு முடியும் இடத்தில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாகன அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பிரதமர் வருகையையொட்டி 5 ஆயிரம் தமிழ்நாடு போலீசாரும் இது தவிர, மத்திய ஆயுதப்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசரும் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வளையத்துக்குள் கோவை கொண்டு வரப்பட்டுள்ளது. கோவையில் இன்றும் நாளையும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் விடிய விடிய தீவிர வாகன சோதனை நடந்தது. ஓட்டல்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், துப்பறியும் நாய் மூலமும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவையில் ” ட்ரோன்” பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவிநாசி ரோட்டில் இன்று மாலையிலும் நாளை காலையிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகைக்காக குண்டு துளைக்காத கார்கள் கோவை வந்துள்ளது. மத்திய – மாநில போலீசார் மொத்தம் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம் மற்றும் சுற்றுலா மாளிகைக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நகர் முழுவதும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.