நேபாளத்தின் பிரதமராக பிரசாந்தா தேர்வு.. பிரதமர் மோடி வாழ்த்து..!

ண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக பிரசாந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. எனினும் பிரதமர் ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஷேர் பகதூர் தூபா இறங்கினார். அதன்படி முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா தலைமையிலான சிபிஎன் மாவோயிஸ்டு கட்சி உள்பட 5 கட்சிகள் கூட்டணியில் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசந்தா, ஷேர் பகதூர் தூபாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புதிய அரசின் 5 ஆண்டு பதவிக் காலத்தில் முதல் 2½ ஆண்டுகளுக்கு தான் பிரதமராக இருப்பதற்கு ஆதரவளிக்குமாறு தூபாவிடம் பிரசந்தா கேட்டுக்கொண்டார்.

ஆனால் தூபா அதனை ஏற்கவில்லை. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, பிரசந்தாவின் சிபிஎன் மாவோயிஸ்டு கட்சி தூபா தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறியது. தூபாவின் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை இழந்தது.

இதனால் புதிய அரசை அமைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரசந்தா, கேபி சர்மா ஒலி மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் பிரசந்தாவுக்கும் கேபி சர்மா ஒலிக்கும் இடையே சுழற்சி முறையில் அரசாங்கத்தை வழிநடத்த ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டது.

மேலும் பிரசந்தாவின் கோரிக்கையின்படி முதல் வாய்ப்பிலேயே அவரை பிரதமராக்க சர்மா ஒலி ஒப்புக்கொண்டார். இதன்படி நேபாளத்தின் பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் மையம்) நாடாளுமன்றக் கட்சியின் தலைவரான புஷ்பா கமல் தகாலை (பிரசந்தா) ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நியமித்தார்.

சிதல் நிவாசில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல்களின்படி, ‘பிரசந்தா’ என்று அழைக்கப்படும் தகாலுக்கான பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாள பிரதமராக பதவியேற்க உள்ள பிரசாந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ,நேபாளத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரசாந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான தனித்துவமான உறவு ஆழமான கலாச்சார இணைப்பு மற்றும் அன்பான மக்கள் உறவுகளை அடிப்படையாகக் கொண்டது என்று பதிவிட்டுள்ளார். இந்த நட்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.