கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் பீலே காலமானார்..

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

பின்னர் கடந்த 2021ம் ஆண்டு பீலே, புற்றுநோய் பாதிப்புக்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சாவோ பாவ்லோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கீமோ தெரபி செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை.

இந்நிலையில், பீலேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பீலேவின் இறப்பை சமூக வலைதளம் மூலம் அவரது மகள் உறுதி செய்தார். பீலேவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் பீலே மூன்று முறை உலகக் கோப்பையை வென்றவர். அவரது முதல் உலகக் கோப்பை வெற்றி 1958 இல் ஸ்வீடனில் கிடைத்தது. அரையிறுதியில் ஹாட்ரிக் கோல் அடித்தார். பிரேசிலின் 1962 உலகக் கோப்பையின் போது அவர் காயமடைந்தார்.

தொடர்ந்து பீலே 1970ம் ஆண்டில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை கோப்பையை தனது கைகளில் பெற்றார் மற்றும் தங்கப் பந்தை வென்றார். போட்டியில் 4 கோல்கள் அடித்தார். பிபா (FIFA) உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார். .