உலகக் கோப்பை கால்பந்து – பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது அர்ஜென்டினா..!

த்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிபோட்டியில் வர்ணனையாளராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். முன்னதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கால்பந்து உலகக்கோப்பையை அறிமுகம் செய்துவைத்தார்.

இதனையடுத்து, உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்புடன் தொடங்கிய இறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும், 36-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவும் கோல் அடித்து பிரான்ஸ் அணியை கலங்கடித்தனர்.

இரண்டாம் பாதியில் நீண்ட நேரமாக எந்த அணியும் கோல் அடிக்காததால் அர்ஜென்டினா அணி ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்தது. ஆனால், கடைசி நேரத்தில் 80 மற்றும் 81 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதன்மூலம் 2-2 என்ற கோல்கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது.

இதனை தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 108-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா தரப்பில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். தனது பங்கிற்கு எம்பாப்பேயும் ஒரு கோல் அடித்ததால் மீண்டும் சமனாகி ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. பரபரப்பாக நடைபெற்ற ஷூட் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பையை 3-வது முறையாக அர்ஜென்டினா அணி தனதாக்கிக் கொண்டது.

உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி இந்திய மதிப்பில் 347 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வென்றுள்ளது. இதேபோல், இரண்டாம் இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு 248 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.