‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை: ஜூலை 1-ல் ஸ்டாலின் தொடங்குகிறார்

சென்னை:’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 1-ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரான அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சார திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடக்கமாக புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பிரத்யேக செயலியின் விவரங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பான திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடைபெற்றது.திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான டிஆர்பி ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கிவைத்தார்.இந்த முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து திமுக தகவல் தொழிலநுட்ப அணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். உறுப்பினர் சேர்க்கை பிரச்சார திட்டம் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஒரு தொகுதிக்கு ஒருவர் என்ற வீதத்தில் 234 தொகுதி பார்வையாளர்களை நியமித்து அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். பயிற்சி பெற்றுள்ள இந்த 234 பேரும் ஜூன் 27 முதல் 29 வரை தங்கள் தொகுதிகளில் வாக்குச்சாவடி, பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி அளிப்பார்கள். பூத்களின் பாகங்களை பிரித்துக்கொண்டு இந்த பயிற்சி அளிக்கப்படும்.இந்த பணியை ஜூலை 1-ம் தேதி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முழுமையாக தொடங்கி வைக்கிறார். அடுத்தகட்டமாக இந்த பணியை ஜூலை 2-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கையில் எடுப்பார்கள்.அதன் தொடர்ச்சியாக ஜூலை 3-ம் தேதி மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்கும் பணிகள் தொடங்கும். இந்தியாவில் முதல்முறையாக பிரத்யேக செயலி வாயிலாக புதிய உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.