இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் அம்சங்களை தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.!

சமீபத்தில் காசியில் நடைபெற்ற தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் “விஷ்வ குரு” என்ற இலக்கை அடைவதற்காக பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள தொலைநோக்கு பார்வையை எடுத்துச் செல்ல வேண்டும்.

காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நாடு சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு பிரிவினைகள் ஏற்பட்டு பல பிரச்சினைகளும் எழுந்தன. ஆனால், பாரதம் என்ற பெயரில் தற்போது ஒரே குடும்பமாக உணர்கின்றனர்.

தமிழகத்தில் நிலவி வரும் சில தவறான மற்றும் எதிர்மறையான அணுகுமுறைகளை அடியோடு ஒழிக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய கல்வி உள்ளிட்ட அம்சங்களை தங்களுடைய சொந்த காரணங்களுக்காக அரசியல் மறுப்பது வருத்தத்தை அளிக்கிறது.

இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் அதை பல மாகாணங்கள் சேர்ந்த அமெரிக்கா தேசம் போன்று சிலர் பார்க்கிறார்கள். அது தவறான ஒன்று. இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் ஒரு சில அம்சங்களை தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது.

இது குறித்து தவறான கருத்துகள் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். பாரத தேசத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றுதான். தமிழகத்தில் நடைபெற்ற திராவிட ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.