இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டும் அனுமதி .. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. இவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கோவில் திருவிழாவின்போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த தனி நீதிபதி, ஆடல் – பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும்போது ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்களை அனுமதிக்கக் கூடாது எனவும், நிகழ்ச்சிகளை இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே நடத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நாடகங்கள் நடத்துவதற்கு இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலும் நேரம் போதாது. ஆகையால் இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடத்த நேரத்தை நீட்டித்து தர அனுமதி வழங்க வேண்டும் என்று 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மனுதாரர் மேல்முறையீடு செய்து இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன், விஜய குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரவு 10 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நாடகம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவு கோவில் திருவிழா குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.