சென்னையில் புதிதாக பன்னோக்கு உயர் மருத்துவமனை- முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!

சென்னை : சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.மறைந்த முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு உயர் மருத்துவமனை கட்டப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதற்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டன. இந்த மருத்துவமனை தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்டதாக 51,429 சதுர மீட்டரில், அதாவது 5,53,582 சதுர அடி கொண்ட கட்டிடமாக கட்டப்படவுள்ளது.

இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான வடிவமைப்பு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், இப்பணிக்காக ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இந்த மருத்துவமனையில் முதற்கட்டமாக 6 தளங்கள் கொண்ட 3 பிளாக் கட்டப்படுகிறது.

அதன்படி ஏ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16736 சதுர மீட்டர் பரப்பளவில் புறநோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக கட்டிடமும், ரூ.78 கோடியில் பி பிளாக்கில் 18,725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடமும், ரூ.74 கோடியில் சி பிளாக்கில் 15968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகள் கட்டிடம் என மொத்தம் 51429 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைய உள்ளது. இந்த நிலையில், சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மூன்று பிளாக்குகள் முதல் கட்டமாக கட்டப்படும் நிலையில் 1,000 படுக்கைகள் வசதிகள் கொண்டு அமைக்கப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.