கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. சசிகலா, கோவை மாஜி எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட சிலரிடம் மே மாதத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.!

கோடநாடு கொலை & கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி தனிப்படை போலீசார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலராக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் கொலை நடந்த கோடநாடு பங்களா, கனகராஜ் உயிரிழந்த இடம், சயான் குடும்பத்தினர் உயிரிழந்த இடம் மற்றும் விபத்து ஏற்படுத்திய வாகனங்கள் குறித்தும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் இதன் அடுத்தகட்டமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி
வி.கே சசிகலா, முன்னாள் MLA ஆறுகுட்டி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் கனகராஜ் உயிரிழந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜோதிடரை தனது மனைவியுடன் சென்று சந்தித்து இருப்பதும் , அப்போது ஜாதகத்தில் கண்டம் இருப்பதாக ஜோதிடர் சொல்லியிருப்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கனகராஜ் சந்தித்த ஜோதிடரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மே முதல் வாரத்தில் இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட இருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.