கோவையில் மருத்துவர் எனக் கூறி போலி தங்க கட்டி, ரூபாய் நோட்டுகள் வைத்து இருந்த நபர்- கேரள போலீசாரால் கைது..!

கோவையில் ஹோமியோபதி மருத்துவர் எனக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த நாகர்கோவிலை சேர்ந்த ஹரேந்திரன் @ எர்வின் எவின்ஸ் என்பவர் போலீசாரால் கைது.

அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஒருபுறம் மட்டும் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், போலி தங்க பிஸ்கட், ரப்பர் ஸ்டாம்ப், ஏர் கன் துப்பாக்கி உள்ளிட்டவை கோவை போத்தனூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தலையோலப்பறம்பு காவல் நிலையத்தில் எர்வின் எவின்ஸ் மீது உள்ள வழக்கு தொடர்பாக கேரள போலீசார் எர்வின் எவின்ஸ்யை திருப்பூரில் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவை வெள்ளலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கேரள போலீசார் அளித்த தகவலின் பெயரில் எர்வின் எவின்ஸ் தங்கி இருந்த வீட்டை கோவை போத்தனூர் போலீசார் சோதனையிட்டனர்.

சோதனையில் போலி தங்க கட்டி ,போலி ரூபாய் நோட்டுகள் போன்றவை வீட்டில் இருந்ததால் வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் புகாரை பெற்று எர்வின் எவின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.