பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: மூன்றாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவது உறுதி…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 150வது சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது நடைபயணத்தை மேற்கொண்டார். ஜிஆர்டி சதுக்கத்திலிருந்து, பாகலூர் சாலை, ராமர் கோவில் சாலை வழியாக பழைய பெங்களூர் சாலை ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தபடியே மக்களை சந்தித்தார். என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை இதைத் தொடர்ந்து ராம் நகர், அண்ணா சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் அவர் உரையாற்றினார். அப்போது, “பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று இந்தியாவில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை முன்னெடுத்து சாதனைகளை நிகழ்த்தியதில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளது. கடந்த 1952 ஆம் ஆண்டு முதல், இந்திய நாடாளுமன்றத்திற்கு எவ்வளவோ தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இந்தியாவிலேயே முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல்தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்து நடத்தப்படக்கூடிய தேர்தலாக அமைகிறது. தற்போது நடைபெறும் அரசியல் கள விவாதம் முழுவதும் ‘பாஜக கைப்பற்றப் போவது 350-க்கு அதிகமாகவா? 450-க்கு அதிகமாகவா?’ என்ற எண்ணிக்கை குறித்துதான் நடைபெற்று வருகிறது. எனவே மூன்றாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவது உறுதி” என்று பேசினார்.