சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை… பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் ரோஜா..!

அமராவதி: ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார்.

அவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழக நிதியில் ரூ.550 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்திரபாபு நாயுடு வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட உள்ளார்.சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததால் அவர் சிறை செல்வது உறுதி.

சந்திரபாபு நாயுடுவின் சிறை தண்டனையை ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கொண்டாடியுள்ளார்.ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரோஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்..