இனி கண்ணை காட்டினாலே போதும்.. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

சென்னை: தமிழ்நாட்டு ரேஷன் கடைகள் அனைத்திலும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.

பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி , பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில்தான் 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.

இதை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள். புதிய திட்டத்தின்படி மக்கள் தங்கள் கண்களை காட்ட வேண்டும். இதை லேசர் கருவிகள் பதிவு செய்யும். கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின் இன்னும் சில கிராமங்களில் இதே திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ச்சியாக வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ரேஷன் பொருட்கள் திருடப்படுவது குறையும். ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாக கூறி ஏமாற்றி வெளியே விற்கும் பழக்கம் குறையும். வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் மீண்டும் கிடங்கிற்கே செல்லும் முறையை கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள்.

முக்கியமாக கேரளா, ஆந்திராவில் அதிக விலைக்கு இந்த பொருட்களை விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட அரிசி பற்றாக்குறை புகார் வந்தால், 24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். அரிசி திருடப்பட்டுள்ளதா என்பதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இது போக தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் திருட்டுகளை தவிர்க்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், பருப்பு பாக்கெட்டுகள் அனைத்திலும் தமிழ்நாடு அரசின் முத்திரை இடம்பெறும். அதற்கு மேலே க்யூ ஆர் கோடு இடம்பெறும். இந்த க்யூ ஆர் கோடு உள்ள மூட்டைகளை யாரும் வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாராவது திருடி வெளியே விற்றால் இதை வாங்க கூடாது.

சமீபத்தில்தான் ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடைகளில் குப்பை இருக்க கூடாது. அதேபோல் பொருட்கள் வைத்து இருக்கும் பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும். தரையில் அரிசி, சர்க்கரை இறைந்து இருக்க கூடாது. அதை திரட்டி மக்களுக்கு கொடுக்க கூடாது. சுத்தத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.