மைனாரிட்டி ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை முதல்வர் பலி கொடுக்கப் போகிறாரா?’ – வானதி சீனிவாசன்

மைனாரிட்டி ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை முதல்வர் பலி கொடுக்கப் போகிறாரா?’ – வானதி சீனிவாசன்

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க சார்பில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, விளக்கேற்றி வழிபாடு செய்தார்.

 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ”சிலிண்டர் வெடித்து பயங்கரவாத தாக்குதல் நடத்த முயற்சி இறைவன் அருளால் தடுக்கப்பட்டுள்ளது. நுற்று கணக்கான மக்களை கொல்லும் சதி கோவில் வாசலில் முறியடிக்கப்பட்டு உள்ளது. சூரசம்ஹாரம் நடைபெற்று இருகிறது. இறைவனுக்கு நன்றி சொல்ல வழிபாடு செய்தோம். சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு, செயல்களுக்கு கூட கருத்து செல்லும் அரசியல்வதிகள் யாரும் கோவைக்கு வரவில்லை. கோவை மக்களுக்கு இந்த மாதிரியான செயல்களுக்கு துணை இருக்க மாட்டோம் என உணர்த்த வந்திருக்க வேண்டாமா? காவல் துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையல் இடத்தை பார்க்க வராது கண்டனத்திற்குரியது. கோவையை இன்னும் பழி வாங்கும் நோக்குடன் முதல்வர் இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. உளவுத் துறை முற்றிலும் செயல் இழந்திருக்கின்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் முதல்வர் கௌரவம் பார்க்க கூடாது. சர்வதேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இன்று பா.ஜ.க நிர்வாகிளுடன் ஆலோசனை செய்த பின் கட்சி தலைவருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

முதல்வர், அமைச்சர் இருக்கும் மேடைகளிலேயே இந்த அரசாங்கம் மைனாரிட்டி போட்டு இருக்கும் பிச்சை என வெளிப்படையாக பேசுகின்றனர். மைனாரிட்டி மக்கள் ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை பலி கொடுக்கும் முடிவிற்கு முதல்வர் வருகிறாரா? பத்திரிகை அறிக்கை கூட கொடுக்க முடியாத அளவிற்கு மைனாரிட்டி ஓட்டு, முதல்வர் கைகளை கட்டிப்போட்டுள்ளது. எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உயிரை விட மைனாரிட்டி ஓட்டு உங்களுக்கு பெரியதாக இருக்கிறதா?

பொதுமக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கூட முதல்வர் பேசவில்லை. திருமாவளவன், சீமான், கம்யூனிஸட் கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர்?. அரசியல் ரீதியாக எதிர் கருத்து சொல்லுங்கள். ஆனால் மக்கள் உயிரோடு சம்மந்தப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். மக்களை உயிரை காப்பாற்ற களத்தில் இறங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.