இந்தோனேசியாவில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..!

ஜகார்த்தா: ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் பெருந்திரளாக திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி. ஜகர்த்தாவில் பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். ஏசியான் மாநாட்டு நிகழ்வுகளுக்குப் பின் இன்று மாலையே பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

இந்தோனேசியா பயணத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: ஆசியான் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதற்காக திரு. ஜோகோ விடோடோ அவர்களின் அழைப்பின் பேரில் நான் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

எனது முதல் நிகழ்ச்சியாக 20-வது ஆசியான் – இந்தியா உச்சிமாநாடு இருக்கும். இப்போது 4-வது பத்தாண்டில் அடியெடுத்துவைத்துள்ள நமது கூட்டாண்மையின் எதிர்கால வரையறைகள் குறித்து ஆசியான் தலைவர்களுடன் விவாதிக்க நான் ஆவலாக உள்ளேன். ஆசிய நாடுகளுடனான உறவு இந்தியாவின் கிழக்கு கொள்கையின் முக்கிய தூணாகும். கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விரிவான திட்டமிடுதல் கூட்டாண்மை நமது உறவுகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பிறகு 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறேன். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட பிராந்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் ஒரு பயனுள்ள வாய்ப்பை வழங்குகிறது. இந்த உலகளாவிய சவால்களை கூட்டாக எதிர்கொள்வதற்கான நடைமுறை ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து மற்ற கிழக்காசிய உச்சிமாநாட்டுத் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள நான் எதிர்பார்க்கிறேன்.

கடந்த ஆண்டு பாலியில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்காக இந்தோனேசியாவுக்கு நான் மேற்கொண்ட பயணத்தை நான் அன்புடன் நினைவு கூர்கிறேன், இந்தப் பயணம் ஆசியான் பிராந்தியத்துடனான நமது உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.