ஊட்டி பஸ் கண்டக்டருக்கு பீர் பாட்டில் தாக்குதல் – வாலிபர்கள் 2 பேர் கைது..!

ஊட்டியில் எச்.பி.எப். பகுதியைச் சோ்ந்தவா் போரன் (வயது 44). தனியாா் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் போரன் சம்பவத்தன்று ஊட்டியில் இருந்து பிங்கா்போஸ்ட்க்கு பஸ் சென்றார். அப்போது மினி பஸ்சில் ஏறிய வாலிபர் ஒருவர் படியில் நின்று பயணித்தார். இதைப் பாா்த்த போரன் அவரை படியை விட்டு மேலே ஏறுமாறு கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது நண்பா்களை, பிங்கா்போஸ்ட் பகுதிக்கு வரும்படி கூறினார். மினி பஸ் பிங்கா்போஸ்ட் வந்ததும், அந்த வாலிபர் தனது நண்பா்களுடன் சோ்ந்து போரனை அடித்து உதைத்து பீா் பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் வலியால் சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்த போரனை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனா். பின்னர் இது குறித்து போரன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி போரனை தாக்கிய ஊட்டி வி.சி. காலனியைச் சோ்ந்த பிராங்க் (24) மற்றும் அவரது நண்பர் ஆனந்த் (32) ஆகியோரை கைது செய்தனா்.