பிரதமர் வேட்பாளராக நிற்க ஆசையிருந்தால்.. முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக நிற்கலாம் – குஷ்பு பேட்டி..!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிரதமர் வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் இருக்க கூடாது என்ற கேள்வி எழுப்பி இருந்தது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை குஷ்பு டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நேற்று பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து குஷ்பு கூறுகையில், தேசிய மகளிர் ஆணையத்தின் எனக்கு ஒரு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

திங்கட்கிழமை தான் டெல்லியில் பதவி ஏற்று கொண்டேன். சென்னையில் என் வேலைகளை முடித்து விட்டு திரும்ப டெல்லி செல்ல உள்ளேன். பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும், தேசிய மகளிர் ஆணையத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் பொறுப்பான பதவி எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு முறையும் பெண்களுக்காக குரல் கொடுத்துள்ளேன். அதனை வைத்து என்னால் இந்த பதவியை ஏற்றுகொள்ள முடியும் என்று நம்பி இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெண்களுக்கு பல துறைகளில் பிரச்சினைகள் வந்துகொண்டுதான் உள்ளது. செய்தித்தாள், சமூக வலைதளங்கள், ஊடகங்களில் செய்திகள் வருவதை பார்க்க முடிகிறது. சராசரி பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் பிரச்சினை உள்ளது. பேருந்தில் பெண்கள் பயணிக்கும் போது அவர்களை உரசுவதும் ஒரு பாலியல் ரீதியான வன்கொடுமைதான். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு எப்படி முற்று புள்ளி வைப்பது எப்படி அதனை சமாளிப்பது என்பதுதான் முக்கியம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பற்றிய கேள்விக்கு, கட்சி ரீதியாக வேறு வேறு இடத்தில் இருந்தாலும் எனக்கும் அவர் முதலமைச்சர் தான். அவருடைய கட்சியில் நான் ஆறு வருடமாக வேலை பார்த்துள்ளேன். எப்படிப்பட்ட உழைப்பாளி என்றும் எனக்கு தெரியும். அவர் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன் அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக வரக் கூடாதா என்று பரூக் அப்துல்லா பேசியது பற்றிய கேள்விக்கு, மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம். இந்திய நாட்டில் ஜனநாயக ரீதியாக யார் வேண்டுமானாலும் பிரதமர், முதலமைச்சர் ஆகலாம். பிரதமராக வேண்டும் என்றால் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் வாக்களித்த காரணத்தால் தான் ஸ்டாலின் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக உள்ளார் என்று தெரிவித்தார்.

பின்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றிய கேள்விக்கு, ஈரோடு தேர்தலில் 74 சதவிகிதம் மக்கள் வாக்களித்துள்ளனர். யார் வெற்றிபெறுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து, மகளிர் ஆணையம் பற்றிய கேள்விக்கு, பதவி என்பது வேறு, தலைவர் என்பது வேறு. பெண்களுக்கு நியாயம் வாங்கி கொடுப்பதற்கான அமைப்பு தான் தேசிய மகளிர் ஆணையம். நாங்கள் சட்டத்தை எங்கள் கையில் எடுக்க முடியாது.

அதற்காக குரல் கொடுத்து நீதியை பெற்று தருவோம். பெண்களுக்கான அமைப்பு ஒன்று உள்ளது. 24 மணி நேரமும் எங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். எங்களுடைய வலை தளங்கள் உள்ளது. இது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளேன். கிராமத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு தைரியம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.