அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று பதிலளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், இந்த மனுக்கள் காலாவதியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது குறித்து நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்ததீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் பதில் மனு தக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தக்கல் செய்ய அனுமதி அளித்து வழக்கு விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.