இந்து கோயில்களின் வருமானத்தை தேவையற்ற விஷயங்களுக்கு அரசு செலவு செய்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இந்து கோயில்களின் வருமானத்தை தேவையற்ற விஷயங்களுக்கு அரசு செலவு செய்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண பேரணி, கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி கென்னடி திரையரங்கு அருகே உள்ள மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசுசுகையில், இந்து உரிமை மீட்பு பிரச்சாரமானது, கடந்த ஜூன் 28 ஆம் தேதி திருச்செந்தூரில் துவங்கி இன்று 18 ஆம் தேதி கோவையில் மிக சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த பேரணி ஜுலை 31ஆம் தேதி சென்னையில் நிறைவடைவதாக தெரிவித்தார்.

“இந்து கோயில்கள், இந்து நிலங்கள் இந்த அரசாங்கம் கையில் இருக்கின்றது. அதன் மூலமாக, பல்வேறு ஊழல்கள் நடந்து வருகிறது. ஆனால், பிற மதத்தவர்களின் சொத்து மற்றும் வருமானங்கள் அவர்களிடம் தான் உள்ளது. அவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் மத மாற்றம் மற்றும் அவர்கள் மத வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்றனர். மாறாக, இந்து கோவிலின் வருமானங்கள் தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டும் என்றால் இந்துக்களுக்கு பல்வேறு தடைகள் உள்ளது. ஆனால், மற்ற மதத்தினவருக்கு எந்த தடைகளும் இல்லை. பிற மதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஆனால், இந்து ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை மறுக்கப்படுகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்ட, தீர்வு காண இந்த பயணமானது ஆரம்பிக்கப்பட்டது. பிற மதத்தவர்களை ஹிந்துக்கள் குறை சொன்னால் அவர்களை உடனடியாக நள்ளிரவில் கைது செய்யும் அரசு, இந்துக்களின் கோயில்களையும், சிலைகளையும் தவறாக பேசினால் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த அரசாங்கம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது”, என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டினர்.