அரசு அதிகாரிகளால் மனஉளைச்சல் ஏற்படுகிறது – முதல்வர் ரங்கசாமி வேதனை..!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாநில அந்தஸ்து கோரும் பல்வேறு அமைப்பினர் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அவர்களிம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் சார்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தக் கூடாது என்ற நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது என்பது ஆட்சியாளர்களுக்கு மட்டும் தான் தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களால் மக்களுக்கு ஒன்றும் செய்யமுடியாத நிலை உள்ளது. அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால் தினமும் மனஉளைச்சல் தான் ஏற்படுகிறது. திட்டத்தை செய்யக் கூடாது என்பதற்காக உடனடியாக அறிவிப்பானைகள் வெளியிடப்படுகின்றன. புதுச்சேரிக்கு மாநில அந்தது தான் தீர்வு.

ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால், புதுவையின் வளர்ச்சிக்காகவும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள் எந்தவித சிக்கலையும் சந்திக்கக் கூடாது என்பதற்காகவும் தான் நாங்கள் மாநில அந்தஸ்து கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் மத்திய பாஜக அரசை நேரடியாக குற்றம் சாட்டியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.