குறைந்த விலையில் வெளிநாட்டுத் தங்க கட்டிகள்… மோசடி கும்பல் சிக்கியது..!

திருச்சி:திருச்சியில் வெளிநாட்டுத் தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி பண மோசடி செய்த கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

வெளிநாட்டுத் தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது

துவரங்குறிச்சியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தங்கம் இருப்பதாகவும், அதைக் குறைந்து விலைக்கு விற்பதாகவும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜியாவுதீனிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய ஜியாவுதீன் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் கடந்த 18ஆம் தேதி, ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் பணத்துடன் காரில் திருச்சி துவரங்குறிச்சிச் சென்றிருக்கிறார்.

திருச்சி துவரங்குறிச்சி வந்தவுடன், ஜியாவுதீன் வெளிநாட்டுத் தங்கம் வாங்கப் பணத்துடன் வந்திருப்பதாக அன்வர் பாஷாவுக்கு போன் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் காவல் துறையினரைப் போல காக்கி உடையில் வேறொரு காரில் சென்ற 7 பேர் கொண்ட கும்பல், தஞ்சாவூரில் இருந்து வந்த ஜியாவுதீன் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை பிடித்து மிரட்டியும் பயமுறுத்தியும் அவர்கள் வைத்திருந்த பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து, ஜியாவுதீன் மற்றும் நண்பர் கார்த்திக் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல் துறையினர், குறைந்த விலைக்குத் தங்கம் கொடுப்பதாகக் கூறி பணம் பறித்த மர்ம கும்பலைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம்  (செப்.21) காலை வளநாடு அருகே டி.பொருவாய் பகுதியில் சந்தேகப்படும்படி, காரில் நின்று கொண்டிருந்த அனிஷ், ஜேம்ஸ், பெருமாள், சக்திவேல், சரவணன் ஆகிய நான்கு பேரையும் பிடித்து தனிப்படை காவல் துறையினர் விசாரித்தனர். அப்படி அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி திருச்சி பாலகரைப் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை, மணப்பாறை பகுதிக்கு வரவழைத்து 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து ஒரு கார், 100 கிராம் தங்க கட்டிகள், 10 போலி தங்கக் கட்டிகள், 21 செல்போன்கள், 12 சிம் கார்டுகள், 2 போலி பதிவு எண் பலகைகள், அரசு முத்திரையுடன் கூடிய சிவில் ஜட்ஜ் என்ற லோகோ மற்றும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைத் தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.