அனைவருக்கும் 5 ரூபாய்க்கு உணவு- பாஜக தேர்தல் அறிக்கையில் ஜேபி நட்டா வாக்குறுதி..!

திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா.

திரிபுரா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுபோன்று, மேகாலயா மற்றும் நாகாலாந்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் மார்ச் 22ல் முடிவுக்கு வருகிறது.

இந்த சமயத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் 51 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 36 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. திரிபுரா சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை பாஜக கடந்த ஜன.28ம் தேதி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், திரிபுரா மாநிலம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக. தேர்தல் அறிக்கையை அகர்தலாவில் அம்மாநில முதல்வர் மாணிக் சாஹாவுடன் இணைந்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். இந்த தேர்தல்அறிக்கையில், திரிபுராவில் அணுகல் சந்திரா திட்டத்தில் அனைவருக்கும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்பின் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, திரிபுரா ஒரு காலத்தில் முற்றுகை மற்றும் கிளர்ச்சிக்கு பெயர் பெற்றது. மாநிலம் இப்போது அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்காக அறியப்படுகிறது.

திரிபுராவில் 13 லட்சம் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.107 கோடி செலவிடப்பட்டுள்ளது. பாஜக வெளியிடும் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம் மட்டும் அல்ல. அது மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகும் எனவும் தெரிவித்தார்.