நேற்று கெஜ்ரிவாலுடன் வீட்டில் உணவு.. இன்று பாஜக பேரணி-அந்தர் பல்டி அடித்த குஜராத் ஆட்டோ ஓட்டுநர்..!

ட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அங்கு முகாமிட்டிருந்தார்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டாணி என்பவர், ‘ நான் உங்களின் ரசிகன். என் வீட்டிற்கு உணவு அருந்த வருவீர்களா? எனக் கேட்டவுடன், அரவிந்த் கெஜிரிவாலும் அவரது வீட்டிற்குச் சென்று உணவு அருந்தினார்.

ஆட்டோ டிரைவடன் அரவிந்த் கெஜிரிவால் உணவு அருந்திய புகைப்படம் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டாணி மீதும் மீடியா வெளிச்சம் விழுந்தது.

இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டாணி பாஜக நடத்திய பேரணியில் கலந்து கொண்டதும் அவர் கூறிய விளக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் தால்ஜெத் நகரில் பாஜக நடத்திய பேரணியில் பிஜேபி கட்சியின் ஆதரவாளர்களின் அடையாளங்களில் கலந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டாணிவிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர். அப்போது அவர் கூறியது, ” அன்று, அரவிந்த கெஜிரிவாலை தன் வீட்டிற்கு அழைத்தது, ஆட்டோ யூனியனின் அதிகாரிகள் அவ்வாறு வீட்டிற்கு அழைக்கச் சொன்னதால் தான் அழைத்தேன். மற்றபடி எனக்கும் ஆம் ஆத்மிக்கு எந்த தொடர்புமில்லை. வீட்டிற்கு உணவுக்கு அழைத்த விசயம் இவ்வளவு பெரியதாகும் என நான் நினைக்கவில்லை. அந்த இரவு உணவுக்குப் பிறகு ஆம் ஆத்மி தலைவர்களுடன் எனக்கு எந்த சம்பந்தமும் இருக்க வில்லை.

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகன். இதுநாள் வரை எல்லா தேர்தல்களிலும் நான் பாஜகவுக்குத் தான் வாக்களித்து வருகிறேன். யாருடைய அழுத்தத்தின் பேரிலும் இந்த நான் சொல்லவில்லை”என்று ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டாணி தெரிவித்துள்ளார்