டாப்ஸ்லிப்பில் வளா்ப்பு யானை தாக்கி பாகன் படுகாயம்..!

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் பகுதியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 25 வளர்ப்பு யானைகள் வனத்துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில், சுயம்பு என்ற வளர்ப்பு யானைக்கு 2 நாள்களாக மஸ்து இருப்பதாக தெரிய வருகிறது.
இதனால் யானைப்பாகன் பிரசாந்த் (வயது 45) என்பவர் யானையை கையாண்டு வந்துள்ளார். நேற்று மாலை யானைக்கு தண்ணீர் வைப்பதற்காக அருகில் சென்றதாகத் தெரிகிறது. அப்போது யானை தாக்கியதில் பாகன் பிரசாந்த் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவா் பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.