எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு கொடுத்த ஸ்பெஷல் சலுகை..!

மிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் வரை காரில் செல்லலாம் என்ற புதிய சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் இடம் வரை தனது காரிலேயே அவர் செல்ல முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அனுமதியை கொடுத்திருப்பதாக விமான போக்குவரத்துத்துறை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக விமான நிலையத்தில் பயணிகள் விமான ஓடுதளம் வரை விமான நிறுவனத்தால் அங்கு இயக்கப்படும் பேருந்துகளில் சென்றுதான் விமானத்தில் ஏற வேண்டியிருக்கும். மிக, மிக முக்கியமான பிரமுகர்களுக்கு மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரையிலும் காரிலேயே செல்ல மத்திய விமான போக்குவரத்துத் துறை அனுமதிக்கும். தற்போது அத்தகைய அனுமதி எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் பயணித்த எடப்பாடி பழனிசாமியை ராஜேஸ்வரன் என்ற நபர் துரோகி என நேரடியாக விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகளால் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் அவருக்கு இத்தகைய அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.