மிஸ்பண்ணிடாதீங்க… 60000 பேருக்கு வேலையாம்.. உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை ஓசூரில் வருகிறது..!!

சென்னை: உலகின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை தமிழகத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அமைய இருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில், உலகிலேயே மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை சீனாவில் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது. ஓசூரில் அமையவுள்ள புதிய தொழிற்சாலையில் அடுத்த 2 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 60,000 பேர் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை டாடா குழுமம் அமைக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேலும் 53 ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் அங்கு ஐபோன் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலையை பல்வேறு நாடுகளில் அமைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வந்தது. இந்த நிலையில் ஒசூரில் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைய உள்ளதாக மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் அறிவித்திருந்தார்.

அப்போது, புதிய ஐபோன் தொழிற்சாலையில் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அவர்களில் 6,000 பணியாளா்கள், ராஞ்சி மற்றும் ஹஜாரிபாக் பகுதிகளைச் சோந்த பழங்குடியினர் என்றும் கூறினார். ஐபோனுக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் பணியினை, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ஐபோன் உதிரிபாகங்களை விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான், பெகட்ரான் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஒசூர் ஆலை மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.