செங்கல்லை வைத்து முட்டாள்தனமான அரசியலை உதயநிதி செய்ய வேண்டாம்- ஈரோடு பரப்புரையில் அண்ணாமலை பேச்சு..!

செங்கல் வைத்து முட்டாள்தனமான அரசியலை உதயநிதி ஸ்டாலின் விட்டுவிட்டு அவருடைய அப்பா தமிழக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூறி வாக்கு கேட்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து இரண்டாவது நாளாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது காந்தி சிலை அருகே தென்னரசை ஆதரித்து, அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த திட்டங்கள் குறித்து விளக்கி வாக்கு கேட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சாதாரணமாக மக்கள் சந்திக்கின்றவராக தென்னரசு இருக்கிறார். 30 அமைச்சர்களும் 27 ஆம் தேதி மாலை காணாமல் போய்விடுவார்கள்.

பணபலம், படை பலம் அதிகார பலத்தை தாண்டி ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவார். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றவரிடம் கொலுசு, சேலை கலாச்சாரம் குறித்து கேட்டதற்கு, மிகவும் தவறான உதாரணமாக இருக்கிறது. ஒருபுறம் முன்னேறிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று பெருமைபடுகிறோம். ஆனால் சந்தி சிரிக்கும் அளவிற்கு திமுக தேர்தல் களத்தை வைத்திருக்கிறது என குற்றம்சாட்டினார்.

இந்தியாவே ஏளனமாக ஈரோடு கிழக்கு தொகுதியை பார்க்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது. பட்டி அமைத்து மக்களை அடைத்து வைத்திருக்கின்றனர். மக்களிடம் கொள்ளையடித்த மற்றும் சாராய பணத்தை கொடுக்கின்றனரா என மக்கள் பேசி ஆரம்பித்து விட்டனர். ஒருபக்கம் பணம் கொடுப்பது தவறு என சொன்னாலும் மற்றொரு பக்கம் மக்கள் மனதில் நம்முடைய பணம் நமக்கு வர ஆரம்பித்துள்ளது. இது மோசமான தமிழகத்தின் ஜனநாயகத்தை சீர்குலைக்கக் கூடிய இளைஞர்கள் அரசியல் பக்கம் தலைவைத்து படுக்க வேண்டாம் என்று நினைக்க கூடிய அளவிற்கு திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் அரங்கேற்றி இருக்கிறது.

இதனை மக்களிடம் விட்டுவிட்டோம் மக்கள் தோற்கடிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. உதயநிதி ஸ்டாலின் செங்கல் பிரச்சாரம் செய்வது குறித்து கேட்டதற்கு, 2026-ல் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் மருத்துவக் கல்லூரியில் 150 மாணவ மாணவிகள் சேர்ந்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். மத்தியில் மோடி அரசும் மாநிலத்தில் அதிமுக அரசு இருக்கும் போது இதுபோன்று ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட செங்கல்களால் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி உருவாகி உள்ளதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

2009-ல் திமுக தேர்தல் வாக்குறுதியில் தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்போம் என தெரிவித்தும் 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கலையும் வைக்கவில்லை. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு தர்மபுரியில் சிப்காட் அமைக்கவும் இந்த செங்கல் உதயநிதிக்கு பார்சல் அனுப்பப்படும். இதேபோல் மதுரை எய்ம்ஸ் முழுமையாக வந்த பிறகு அவர் வைத்திருக்கும் செங்கல்லை வாங்கிக் கொள்கிறோம். இதுபோன்ற முட்டாள் தனமான அரசியலை உதயநிதி ஸ்டாலின் விட்டுவிட்டு கடந்த 22 மாதத்தில் அவருடைய அப்பா தமிழக மக்களுக்கு செய்ததை கூறி வாக்கு கேட்டு வருவதற்கு துப்பில்லாத உதயநிதி ஸ்டாலின், ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு வருவது நகைச்சுவையாகவும் அவர் நடித்த காமெடி படம் போல் உள்ளது என கடுமையாக விமர்சித்தார்.