திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு டாய்லெட் பேப்பர் – அண்ணாமலை கடும் விமர்சனம்.!!

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர் என கோவை பாஜக வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: திமுகவுக்கு தேர்தல் வருவதும் தேர்தல் அறிக்கை கொடுப்பதும், தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை எல்லாம் செய்யாமல் விடுவதும். அதன் பிறகு அடுத்த தேர்தல் வந்ததும் அதே அறிக்கையில் சில மாற்றங்களை செய்வது வாடிக்கைதான்.

அதாவது முன்பு சிலிண்டர் விலை ரூ 100 குறைக்கிறோம் என போட்டிருந்தால், இப்போது ரூ 500 என போடுவோம். பெட்ரோல் விலையை ரூ 5 குறைப்பதாக சொல்லியிருந்ததை இப்போது ரூ 30 குறைப்பதாக போடுவோம். 2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் பெட்ரோலை இலவசமாக கொடுப்போம் என்பார்கள்.

வீட்டில் ஹோஸ் போட்டு கொடுத்து விடுவோம், அப்படியே ஹோஸை எடுத்து வண்டியில் நுழைத்தால் போதும் என்பார்கள். உங்கள் வீட்டில் டாய்லெட் பேப்பர் இல்லாவிட்டால் திமுக தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள். பொட்டலம் கட்டுவதற்கும் இதை பயன்படுத்தலாம். 2019ஆம் ஆண்டு 295 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தோம்.

அதையெல்லாம் நிறைவேற்றிவிட்டு 2024 தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். 2024 தேர்தல் அறிக்கையில் உள்ளதையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என மக்களுக்கு தெரியும். எனக்கும் அதிமுக வேட்பாளருக்கும் ஒரு சண்டையும் இல்லை. என் சண்டை அறிவாலயத்துடன், கோபாலபுரத்துடன்! ஆதிக்க சக்திகள் வளர்ச்சியை தடுத்திருக்கிறார்களோ அவர்களோடு!

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் சண்டை, தமிழகத்தின் அரசியலை அடியோடு மாற்றிக் காட்டுவதற்கான சண்டை, நிஜ வளர்ச்சி என்றால் என்னவென காட்டக் கூடிய தேர்தலுக்காகவும் சண்டை.. எனவே மற்ற வேட்பாளர்கள் என்னவேணாலும் சொல்லட்டும், எல்லோர் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது.

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு எல்லா அமைச்சர்களும் வந்து நூற்று கோடிக்கணக்கான பணத்தை எல்லாம் செலவு செய்வார்கள். நான் மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன். மக்களை நம்பி, கோவையிலிருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும் என நம்பி போட்டியிடுகிறேன்.

நீங்கள் பூதக்கண்ணாடி போட்டு பார்த்தாலும் நான் எந்த காசையும் செலவு செய்ய மாட்டேன். தமிழகத்திலேயே செலவு குறைந்த தேர்தலாக கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் இருக்க வேண்டும் என்ற சங்கல்பத்துடன் வேட்பாளராக வந்துள்ளேன். தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு தேர்தல் செலவு இல்லாமல் நடத்த வேண்டும்.

அடுத்த 40 நாட்களும் பாஜகவை கவனியுங்கள் , நாங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறோமா என பாருங்கள். 33 மாதங்களாக எதிர்க்கட்சியினர் சம்பாதித்த பணத்தை எல்லாம் இறக்குங்கள். முதல்வரே வந்து முகாம் அடித்தாலும் இங்கு ஒன்றும் நடக்காது. தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கோவையிலிருந்து மக்கள் ஜூன் 4 ஆம் தேதி அன்று ஆரம்பிப்பார்கள். அடுத்த 2 ஆண்டுகளில் கோவையில் ஏற்பட்ட மாற்றத்தை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்வேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அண்ணாமலை நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை சென்றுள்ளார். தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் 4 கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 24 தொகுதிகளாகும்.