காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக அரசு அனுமதி..? முதல்வரிடம் விளக்கம் கேட்கும் டிடிவி.தினகரன்..!

திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக காவிரி டெல்டா பகுதி மக்கள் குற்றம்சாட்டி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, 2020ம்ஆண்டு அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காவிரி டெல்டாவின் திருவாரூர் சேந்தமங்கலம் பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பதாக வரும் செய்திகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அப்பகுதியில் விவசாயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. அப்படி அனுமதிக்கப்பட்டால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். இதிலும் பழனிசாமி அரசைப் போலவே ஸ்டாலின் அரசும் தமிழகத்தை வஞ்சிக்க நினைக்க கூடாது என்று தினகரன் கூறியுள்ளார்.