ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்க களத்தில் இறங்கிய மற்றொரு அணி… சென்னையில் ஆலோசனை கூட்டம்..!!

அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடக்கின்றன. சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று அதிமுக பல அணிகளாக பிரிந்து இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் இவர்களை யாருமே பிடிக்காத இவர்களால் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் எம். ஜி. ஆர் ஆதரவாளர்கள் அணி ஒன்றும் உள்ளது.

இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ‘ஒன்றிணைந்த அதிமுக’வை உருவாக்க முயன்று வருகிறார் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. பழனிச்சாமி. இதற்காக அவர் சென்னை வடபழனியில் பழனியாண்டவர் கோயில் தெருவில் உள்ள டிஜே மினி ஹாலில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருக்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவின் எதிர்காலம், தொண்டர்களின் உரிமை பாதுகாத்தல் ,தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒற்றைத் தலைமை , இலஞ்ச ஊழல் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக , புரட்சித் தலைவர் எம்ஜிஆர் எழுதிய உயிலின்படி அவரது தொண்டர்களால் மட்டுமே தலைமை முடிவு செய்யப்பட்டு அதி முக வழிநடத்தப்பட வேண்டும். ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் கேசி பழனிச்சாமி.

இது குறித்து கேசி பழனிச்சாமி மேலும், ”புரட்சி தலைவர் & அம்மா வளர்த்த அதிமுக, இன்று இரட்டை இலை முடக்கத்தை நோக்கி நகர்கிறது. இதை பாதுகாப்பது தொண்டர்களால் மட்டுமே முடியும். பாஜக, திமுக மற்றும் நீதிமன்றங்களின் துணையோடு அதிமுக முடக்கத்திலிருந்து மீட்டெடுக்க வரும் 31.07.22 நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்”என்று அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.