டெல்லி மதுபான கொள்கை ஊழல்: தெலங்கானா முதல்வர் மகள் கவிதா 20-ல் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்..!

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வரும் 20-ம் தேதி ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு புது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் தெலங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கவிதாவிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். 16-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

இதன்படி கவிதா நேற்று ஆஜராகவில்லை. மாறாக அவரது கட்சி பிரதிநிதி ஒருவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைஅதிகாரியிடம் ஒரு கடிதத்தைசமர்ப்பித்தார். அத்துடன் கவிதாவின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை அறிக்கை, தனிப்பட்ட மற்றும் தொழில் தொடர்பான விவரங்களையும் வழங்கினார்.

அந்தக் கடிதத்தில், ‘டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய தடை விதிக்கக் கோரியும் சம்மனை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இது வரும் 24-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என கவிதாவுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று புது சம்மன் அனுப்பினர்.