காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – வருமான வரித்துறை… பின்னணி என்ன..?

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 – 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதோடு 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்காக ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கன் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் இப்போது செலவு செய்ய, மின் கட்டணம் செலுத்த, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை. இதனால் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை மட்டுமின்றி அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும். வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால் கட்சியின் வங்கிக் கணக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயமே முடக்கப்படும், பாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார். மேலும் வருமான வரித்துறையின இந்த நடவடிக்கை கண்டத்திற்குரியது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.