டாஸ்மாக் கடையில் வடமாநில தொழிலாளி கொலையில் கோவை வாலிபர் கைது..!

கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பில்ட்ராம் (வயது 39). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தனது 2 தம்பிகளுடன் தங்கி இருந்து அங்குள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று பில்ட்ராம் சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அந்த டாஸ்மாக் கடையில் மது அருந்த வரும் நபர் ஒருவர், அங்கு வருபவர்களிடம் பணத்தை பறித்து தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதேபோன்று அந்த நபர் நேற்று மது அருந்த வந்த பில்ட்ராமிடம் பணம் தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் அந்த நபர் பில்ட்ராமிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சி செய்தார். அப்போது பில்ட்ராம் அவரை தடுத்து உள்ளார். பின்னர் டாஸ்மாக் கடை முன்பு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அந்த நபர், பில்ட்ராமை அடித்து கீழே தள்ளிவிட்டார். இதில் பில்ட்ராம் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். அறைக்கு திரும்பிய பில்ட்ராமின் தம்பி ரஞ்சித் ராம், பில்ட்ராமை காணவில்லை என தேடி கொண்டு இருந்தார். அப்போது டாஸ்மாக் கடை ஊழியர் விக்னேஷ் என்பவர் ரஞ்சித் ராமிடம், அவரது அண்ணன் பில்ட்ராம் டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடப்பதாக கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் ராம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது அண்ணனின் உடலை கண்டு கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பில்ட்ராமின் உடலை மீட்டு கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதணை செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பில்ட்ராமிடம் தகராறு செய்த அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சரவணம்பட்டி விநாயகாபுரம் 2-வது வீதியை சேர்ந்த சூரியா (24) என்பவர் பில்ட்ராமை தள்ளிவிட்டதில் இறந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.