கோவை இருகூரில் டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதி விபத்து : மது போதையில் வந்த நபரிடம் விசாரணை.!!

கோவை இருகூர் சாலையில் இரட்டை புளியமரம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை அந்த கடைக்கு மது வாங்குவதற்காக முழு போதையில் காரை வேகமாக இயக்கி வந்த நபர், காரை வேகமாக கடையின் அருகில் இருந்த டிரான்ஸ்பாரம் அருகில் நிறுத்த முயன்றார்.

ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததுடன், காரின் மீது டிரான்ஸ்பார்மர் சரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த மக்கள் முழு போதையில் இருந்த அந்த நபரை மீட்டு அமர வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அ.ம.மு.க கொடி கட்டிய வாகனத்தை ஓட்டி வந்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் போதை ஆசாமியின் செயலால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.