கோவை கேட்டரிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.4½ லட்சம் பணம் , அமெரிக்கன் டாலர்,வைர நகைகள் அபேஸ் செய்த நண்பன்- தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு..!

கோவை ராமநாதபுரம் புலியகுளம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கேட்டரிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். எனது நண்பர் நிறைமொழி. அவரது குடும்பம் அமெரிக்காவில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் கோவை வந்தனர். அப்போது நிறைமொழி மற்றும் அவரது மனைவி நிவேதிதா எனது வீட்டில் தங்க அனுமதி கேட்டனர். அவர்களை எனது வீட்டில் தங்க வைத்து நான் சாய்பாபா காலனியில் உள்ள எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். அந்த சமயத்தில் ரவிகுமார் என்பவர் எனது கேட்டரிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவரையும் நிறைமொழியுடன் எனது வீட்டில் தங்க வைத்தேன்.
எனது வீட்டில் படுக்கை அறையில் உள்ள லாக்கரில் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம், ரூ 2 லட்சத்து 26 ஆயிரத்து 800 மதிப்புள்ள அமெரிக்கன் டாலர், ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகளை வைத்து இருந்தேன். இந்த நிலையில் எனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நிறைமொழியை எனது வீட்டை காலி செய்ய கூறினேன். அப்போது அவர் திடீரென என்னிடம் கூறாமல் வீட்டை காலி செய்து சென்றார். பின்னர் நான் வீட்டுக்கு சென்று லாக்கரை சோதனை செய்தேன். அப்போது அதில் இருந்த பணம், அமெரிக்கன் டாலர் மற்றும் வைர மோதிரம் காணாமல் போயிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் ரவிகுமாரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் நிறைமொழி கள்ள சாவிவை பயன்படுத்தி திருடியதாக தெரிவித்தார். எனவே எனது வீட்டில் தங்கி பணம், அமெரிக்கன் டாலர் மற்றும் வைர மோதிரத்தையும் திருடிய
நிறைமொழி மற்றும் அவரது மனைவி நிவேதிதா, அவர்கள் திருடியதை என்னிடம் மறைத்த ரவிகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் போலீசார் நிறைமொழி, நிவேதிதா மற்றும் ரவிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.