வாகனம் நிறுத்துவதில் கோஷ்டி மோதல் : தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு கத்திகுத்து..!

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48) அவரது மகன் சுரேந்திரன் (வயது 19) நேற்று இவர்களுக்கும் அதே ஊரை சேர்ந்த அரவிந்தன் ( வயது 30) சுதர்சன் ( வயது 19) குணசேகரன் ( வயது 23 )நாகராஜ் ( வயது 50) ஆகியோருக்கும் இடையே அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வராஜ் அவரது மகன் சுரேந்திரன் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. இவர்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டு 4 பேரும் தப்பி ஓடி விட்டனர் . இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அரவிந்தன், சுதர்சன், குணசேகரன் நாகராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அரவிந்தன் ( வயது 30) நெகமம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னை சூர்யா, சுரேந்திரன், செல்வராஜ் பழனியம்மாள் ஆகியோர் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.