கோவை நட்சத்திர ஓட்டல் பாரில் கோஷ்டி மோதல் – கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது..!

கோவை இடையர்பாளையம் சிவாஜி காலனியை சேர்ந்தவர் பவன்குமார்( வயது 20). இவர் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ரோபோடிக்ஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த சனிக்கிழமை ரேஸ்கோர்சில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள பாரில் மது அருந்தினர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த செல்போன் கடை உரிமையாளர் ஆஷிக்(36) என்பவருக்கும், பவன்குமார் உட்பட அவரது நண்பர்களுக்கும் திடீரென மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆஷிக் தகாத வார்த்தைகளால் பேசி பவன் குமாரை தாக்கினார். தடுக்க முயன்ற அவரது நண்பர்களையும் தாக்கி மிரட்டல் விடுத்தார். அப்போது அங்கு வந்த ஓட்டல் பவுன்சர்கள் ஆஷிக்கை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து இருதரப்பிலும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மது போதையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட உக்கடம் ஜேகே கார்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் ஆஷிக், கல்லூரி மாணவர்கள் பவன்குமார்(20), அவரது நண்பர் கோவை சாயிபாபா காலனி சின்னம்மாள் தெருவை சேர்ந்த பிரித்விராஜ்(20), ஓட்டல் பவுன்சர்கள் கரும்புக்கடை வள்ளல் நகரை சேர்ந்த முகமத் ரஷீக்(29) மற்றும் கரும்புக்கரை மதீனா நகரை சேர்ந்த முகமத் சபீக்(27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.