ஈவெரா திருமகன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், வீரமணி இரங்கல்..

சென்னை: தந்தை பெரியாரின் கொள்ளு பேரனும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமாகிய ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் சொல்லின் செல்வர் ஈவெகி சம்பத், தந்தையார் ஈவிகேஎஸ் இளங்கோவன் எனப் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஈவெரா திருமகன், 2021-ல்தான் முதல் முறையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. வானார்.

அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்து கொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராக திகழ்ந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு கூட குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக் கொண்டு வந்து என்னிடம் வாழ்த்துப் பெற்று சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது. தனது அன்புமகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவன் அவர்களை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.

ஈவெரா திருமகன், மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழக காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட் அனைவருக்கும் கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அருமைத் தோழர் மானமிகு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் அருமை மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா. (வயது 46) மாரடைப்பால் ஈரோட்டில் மரண மடைந்தார் என்பதை அறிந்து பெரிதும் வேதனையும், துயரமும் அடைகிறோம்.

தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது.திருமகன் ஈவேரா அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளை பறித்து விட்டது. அவரை இழந்து வாடும் தந்தை ஈ.வே.கி.ச இளங்கோவன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தந்தை பெரியார் பாரம்பரியத்தில், சொல்லின் செல்வர்  ஈ.வெ.கி. சம்பத் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்  ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோரின் அரசியல் பாதையைப் பின்பற்றி, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். சமூக ஊடகத்துறையில் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் கருத்துகளை பரப்பியவர். 46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தையார் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவேகிச இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஐயா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகனும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெரும் மனவேதனையும் அடைந்தேன். மகனை இழந்துவாடும் ஐயா @EVKSElangovan அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்புத்தம்பி திருமகன் ஈவெரா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

திராவிடர் இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்: திருமகன் ஈவெரா காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து தவிக்கின்ற அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் தம்பி திருமகன் குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆறாத துயரத்திலிருந்து விரைந்து விடுபட காலமகளை யாசிக்கிறேன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வே.ரா அவர்களின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா அவர்கள் இளம் வயதிலேயே உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. அவரது மறைவு . ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். காங்கிரஸ் கட்சியினருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இரக்கமும்,அன்பும் நிறைந்த இதயத்திற்குச் சொந்தக்காரர். மிகச்சிறந்த அறிவாளி,சமூகத்தின் பால் அளவற்ற அக்கறை உள்ளவர்,சமூக நீதியின் பால் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர், உறுதியான கொள்கைப் பிடிப்புள்ளவர் எல்லாவற்றிற்கும் மேலாக எனது நெடுநாள் நண்பர். இந்த இழப்பை எதிர்கொள்ளவே முடியவில்லை.

தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அரசியலில் வளர்ந்து வந்துகொண்டிருந்த இளம் வயதிலேயே திருமகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எனது நண்பர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மகனுமான திரு. ஈவெரா இ.திருமகன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தி மிகுந்த பேரதிர்ச்சியை அளித்துள்ளது.திருமகன் அவர்கனை இழந்து வாடும் அவரது தந்தை  ஈ.வெ.கி.ச. இளங்கோவன் , அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பனர் திரு. திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவால் இறந்த செய்தி அறிந்து பேரதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். மிக இளம் வயதில் அவரது இழப்பு குடும்பத்தினருக்கு எப்படிப்பட்ட துயரத்தைத் தரும் என்பதை உணர முடியும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சகோதரர் இவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , வேதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருமகன் அவர்களின் இழப்பை தாங்கும் மனவலிமையைத் தந்திட எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

எமது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ வெ ரா திருமகன் அவர்கள் சற்று நேரம் முன் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது தாங்கமுடியாத துயரமும் வேதனயும் தருகிறது. ஈ வெ ரா திருமகன் துடிப்பான இளைஞர். நூல்களைப் படிப்பதில் ஆர்வமுள்ளவர் என்று நான் அறிவேன். மக்கள் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ‘நல்ல MLA’ என்ற நற்பெயரைப் பெற்றவர். அவருடைய அகால மரணம் அவருடைய தந்தை EVKS இளங்கோவன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என்பதை நான் அறிவேன்.இது காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு தம்பி திருமகனுக்கு கனத்த நெஞ்சுடன் என்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியார் அவர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மூத்த மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்தவுடன் அளவுகடந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

காங்கிரஸ் கட்சியிலும் தீவிரமாகப் பணியாற்றியதோடு, அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவிலும் செயலாற்றி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக தொகுதியில் அரிய சேவைகளைச் செய்து வந்தார். வாழ வேண்டிய 46 வயதிலேயே அவர் இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, என்னுடைய துயரத்தையும், இரங்கலையும் தெரிவித்தேன்.தாங்க முடியாத இந்தத் துக்கத்தை அவரோடும், அவரது குடும்பத்தினரோடும், காங்கிரஸ் கட்சியினரோடும் பகிர்ந்துகொண்டு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.