பெண்ணை தாக்கிய வழக்கு… பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை விரைவு..!!

சென்னை :பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாகி உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு ஆட்களை அழைத்து வர கொடுத்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று பாஜக மாவட்ட துணை தலைவர் ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவி ஆகியோரை வீடு புகுந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் மீது நடவடிக்கை எடுத்த கோட்டூர்புரம் போலீசார், பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத், சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணை தலைவரும் அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுனருமான ஸ்ரீதர், பாஜக பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி உட்பட 6 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநரும், பாஜ மண்டல துணை தலைவருமான ஸ்ரீதர் நேற்று கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியாக கூறப்படும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உட்பட 5 பேரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், கைது செய்ய நெருங்கும் போது, பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாகி உள்ளதாக போலீசாருக்கு தெரியவந்தது. இருப்பினும் அவர் கடலூரில் இருப்பதாக துப்பு கிடைத்ததை அடுத்து தற்போது தனிப்படை போலீசார் அவரை கைது செய்ய விரைந்துள்ளனர்.