பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும் – சீமான் பேட்டி.!!

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மகேஷ் ஆனந்தை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது,

“போராடும் அரசு ஊழியர்கள், மக்களை இந்த அரசு ஒடுக்க தான் செய்கிறார்களே தவிர, தீர்வை காணவில்லை. 10 ஆண்டு கால ஆட்சியில், பாஜக ஒரே ஒருவனுக்கு நல்லது செய்தது என சொல்லுங்க பார்ப்போம். ஆந்திராவில் செம்மரக் கட்டை வெட்டியதாகக் கூறி 20 தமிழர்களை அம்மாநில அரசு சுட்டுக் கொன்ற போது அதிமுகவும், திமுகவும் வேடிக்கை தான் பார்த்தது.

கர்நாடகாவில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என சொல்லும் கட்சிக்கு 10 சீட்டு கொடுத்து இங்கு தேர்தலை சந்திக்கிறது திமுக. அதை எதிர்த்து கேட்க தெம்பில்லை. இதில், பாஜகவின் நிலைப்பாடு என்ன என்றும் தெரியவில்லை. முதன் முதலில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என சட்டசபையில் பேசியவர் கருணாநிதி அவர்கள். ஆனால், இன்றைக்கு இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள். சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்காமல் உள்ளே அடைத்து வைத்துள்ளது தான் இவர்களது பாதுகாப்பா. இவர்களா இஸ்லாமிய காவலர்கள்? என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபர்களிடமிருந்து சுமார் 3 கோடியே 99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர்…

இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லையா? பணம் செல்லவில்லை என்று அர்த்தமா?. தொடர்ந்து, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும். இப்போது ஏதோ ஒரு இடத்தில் தான் பிடித்திருக்கிறார்கள். ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என சொன்னவர் எங்கள் தம்பி அண்ணாமலை, அவர்தான் இதற்கு பதில் கொடுக்க வேண்டும்.

திமுக வேட்பாளர் கதிர் அண்ணன் பெண்கள் குறித்து பேசிய பேச்சை அவர்களின் குடும்ப பெண்கள் சகித்துக் கொள்வார்களா? கதிர் ஆனந்த் இதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அவருடைய அப்பா துரைமுருகன் சொல்கிறார். நாடாளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிந்தால் தான் போக வேண்டும் என்று. அப்படியென்றால் தமிழை ஆட்சி மொழியாக்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களுக்கு இந்தியில் தான் பெயர் வைத்துள்ளது அதையும் இவர்கள் கேட்க மாட்டார்கள்.

இதுவரை காசு கொடுப்பவர்களின் பணத்தைப் பிடித்தது என்று ஏதாவது ஒன்றை காட்ட முடியுமா? ரம்ஜான் நேரம் என்பதால் ஆடு, மாடு விற்பனை செய்யும் பணத்தை எப்படி விவசாயிகள் எடுத்துச் செல்வார்கள்? இதனால் மக்கள் பெரிதும் பாதித்திருக்கிறார்கள் இதற்கு வழிவகை செய்ய வேண்டும். தேர்தல் பறக்கும் படையினரின் நடவடிக்கையை கொடுமையாக பார்க்கிறேன். ஊழல் இல்லாத அரசு என கூறும் பாஜக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து 150 கோடி கொடுத்தது ஊழல் இல்லையா?

அண்ணாமலை பேசியதாலேயே டிக் டாக்-ஐ போன்று இதையும் தடை செய்து விடுவார்கள் போல. கேட்டால் அதில் நாங்கள் தவறான தகவலை பரப்புகிறோம் என்கிறார்கள். இவர்கள் செய்வதை தானே நாங்கள் பரப்புகிறோம். விட்டா இ-மெயில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எல்லாவற்றையும் வரும் காலத்தில் தடை செய்ய வாய்ப்பிருக்கு?

இலவச பேருந்து என்ற திட்டத்தை அமல்படுத்தி விட்டு தரமற்ற பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. அதில், பயணிக்கும் எங்கள் பெண்களையே அவதூறாக பேசுகிறார்கள் இதுதான் திமுகவின் பெண்ணிய உரிமையா?” என்று சீமான் கேள்வியெழுப்பினார்..